வெளியானது ரஜினியின் 'வேட்டையன்'... திரையரங்குகளில் திருவிழா கொண்டாட்டம் !


வெளியானது ரஜினியின் வேட்டையன்... திரையரங்குகளில் திருவிழா கொண்டாட்டம் !
x

தமிழக திரையரங்குகளில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். என்கவுன்டர் தொடர்பான ஆக்சன் படமான இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களான இவர்கள் இருவரும் நடித்திருப்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட் அடித்த நிலையில், டிரெய்லரும் பலரும் கவனிக்கும் வகையில் அமைந்தது. இப்படி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் 'வேட்டையன்' திரைப்படம், உலகமெங்கும் இன்று வெளியாகிறது.

தமிழக திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் வெளியாக இருந்தநிலையில், இன்று ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பல திரையரங்கில் காலை முதலே சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கியது. இந்த நிலையில், ரசிகர்கள் 'வேட்டையன்' படத்தைக் காண திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதிகாலை முதலே பல திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Next Story