நகுலின் 'வாஸ்கோடகாமா' டிரெய்லர் வெளியானது


“மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்..” என்கிற வசனங்களோடு ‘வாஸ்கோடகாமா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல், சங்கர் இயக்கிய 'பாய்ஸ் 'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 -ம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.


தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அருண் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, பைட் கிளப் போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.

'வாஸ்கோடகாமா' திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்று வழங்கி உள்ளது.

இந்த நிலையில் 'வாஸ்கோடகாமா' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனம் கவனம் பெற்றுள்ளது. மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்.." என்கிற வசனங்களோடு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.


Next Story