காஷ்மீரில் லெஜண்ட் சரவணன்... விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என ட்வீட்!


காஷ்மீரில் லெஜண்ட் சரவணன்... விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என ட்வீட்!
x

Image Courtesy : @yoursthelegend twitter

விஜய்யின் ‘லியோ’ படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கணித்து வந்தனர்.

ஸ்ரீநகர்,

கடந்த ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படத்தை லெஜண்ட் சரவணன் தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். கடந்த ஆண்டு மறைந்த நடிகர் விவேக்கிற்கு இந்த படம் கடைசி படமாக அமைந்தது.

இதனையடுத்து லெஜண்ட் சரவணன் தற்போது காஷ்மீர் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அண்மையில் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதால், விஜய்யின் படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கணித்து வந்தனர்.

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "காத்திருப்பு நெருங்குகிறது. விரைவில் அப்டேட்கள் வெளியாகும்" என்று பதிவிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story