தேர்தலில் வெற்றி பெற்றால் நடிப்புக்கு முழுக்கு - கங்கனா ரனாவத்


தேர்தலில் வெற்றி பெற்றால் நடிப்புக்கு முழுக்கு - கங்கனா ரனாவத்
x

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொண்டு படிப்படியாக நடிப்பை கைவிட்டுவிடுவேன் என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசுவது, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசுவது என்று இருந்தார். உடனே பா.ஜ.க கங்கனாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாராளுமன்ற தேர்தலில் அவரது சொந்த ஊரான ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிவந்த கங்கனா ரனாவத் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அதன்படி பாஜக சார்பில் களமிறங்கியுள்ள கங்கனா, மண்டி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றால் பாலிவுட்டை விட்டு விலகுவாரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஆம்" என்று பதிலாளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "திரையுலகம் எனபது பொய், அங்குள்ள அனைத்தும் போலி. திரையுலகினர் எதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறார்கள். பார்வையாளர்களைக் கவரும் ஒரு போலியான பளபளப்பான உலகம் அது. கட்டாயத்தாலேயே நான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும்போது நான் கதை எழுதத் தொடங்கினேன். படம் இயக்குவது, தயாரிப்பது என என்னை பிசியாக வைத்துக்கொண்டேன். இனி முழுநேர அரசியலில் ஈடுபடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

'குயின்', 'தனு வெட்ஸ் மனு' உள்ளிட்ட படங்களின் மூலம் கங்கனா பாலிவுட்டில் பிரபலமானார். கங்கனாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள எமர்ஜென்சி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


Next Story