ஆணவக்கொலை வன்முறை அல்ல.. அக்கறைதான்- நடிகர் ரஞ்சித்


ஆணவக்கொலை வன்முறை அல்ல.. அக்கறைதான்- நடிகர் ரஞ்சித்
x

ஆணவக்கொலை குறித்து நடிகர் ரஞ்சித் விளக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம்,

நடிகர் ரஞ்சித் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய கவனம் பெற்றார். சில ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியிருந்தவர், தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக வலம் வந்தார். தற்போது, கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

கவுண்டம்பாளையம் படத்தின் புரோமோசனுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில், "நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதிவெறியன் என்றால், ஆம் நான் சாதிவெறியன்தான்" எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆணவப்படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், "ஆணவக்கொலை என்பது உணர்ச்சிதான். நான் என்னுடைய படத்திலும் இதற்கு தீர்வு சொல்லியிருக்கிறேன். நேரடியாக ஒரு காதல் நடக்கும்போது பெற்றோர்கள்தான் பாதிக்கிறார்கள். அவர்களுக்குதான் அதன் வலி தெரியும். உங்களுடைய பைக்கையோ அல்லது செல்போனையோ யாராவது ஒருவர் திருடிவிட்டால் உடனே சென்று அடிப்பதில்லையா அதுமாதிரிதான் இதுவும். தன் வாழ்க்கை, சுவாசம் அனைத்தும் தான் பெற்ற பிள்ளையாக நினைக்கும் பெற்றோர்களுடைய கோபம் ஒரு அக்கறையினால் வருவதுதான். ஆணவப்படுகொலை ஒரு வன்முறையோ கலவரமோ அல்ல. எது நடந்தாலும் அது அக்கறையின் காரணமாக நடப்பவைதான். 'கவுண்டம்பாளையம்' ஜாதி படமில்லை" எனப் பேசியுள்ளார்.

இவர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.


Next Story