'டிமான்ட்டி காலனி - 2' படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!


டிமான்ட்டி காலனி - 2 படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!
x

‘டிமான்ட்டி காலனி - 2’ படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

சென்னை,

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து மிரட்டலான டிரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. எனவே ரசிகர்கள் பலரும் படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தினை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டிமான்ட்டி காலனி - 2 திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.2.76 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிமான்ட்டி காலனி - 2 திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது. மேலும், இப்படத்திற்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், படக்குழுவினர் இந்த வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.


Next Story