சிம்பு பட இயக்குநரிடம் பணமோசடி... உதவி இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு


சிம்பு பட இயக்குநரிடம் பணமோசடி... உதவி இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x

சிம்பு படத்தை இயக்கி வரும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பண மோசடியில ஈடுபட்ட உதவி இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி(40). இவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியுள்ளார். தற்போது அவர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சென்னை அண்ணாநகர் ஜி பிளாக் 19-வது தெருவில் அவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் "நான் தமிழ் சினிமாவில் இயக்குநராக இருக்கிறேன். என்னிடம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் முகமது இக்பால் என்பவர் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் என் வீட்டு வரவு செலவு கணக்குகளை உதவி இயக்குநர் முகமது இக்பால் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 150 கிராம் தங்க நகைகளை முகமது இக்பாலிடம் கொடுத்து அண்ணாநகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்று வாருங்கள் என கூறியிருந்தேன். அப்படி நகையை அடகு வைத்துக் கிடைத்த 3 லட்ச ரூபாயை முகமது இக்பால் கையாடல் செய்துவிட்டார். பணம் குறித்துக் கேட்டபோது எனக்கும் என் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிங் பெரியசாமி தற்போது சிம்பு நடிப்பில் STR 48 படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று படமாக உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


Next Story