பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் சூர்யா


பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் சூர்யா
x

நடிகர் சூர்யா வருகிற பிறந்த நாளையொட்டி தனது ரசிகர்களுடன் இணைந்து ரத்த தானம் செய்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யா தனது 49-வது பிறந்தநாளை வருகிற 23-ம் தேதி கொண்டாட உள்ளார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் அல்லது டிரெய்லர்அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

கடந்த சில வருடங்களாக நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் புத்தக தானம், ரத்த தானம், மரங்கள் நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, அவரது பிறந்தநாளில் 2000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இரத்த தானம் செய்தபோது, நடிகர் சூர்யா அடுத்த ஆண்டு அவர்களுடன் இணைவதாக தனது ரசிகர்களுக்கு உறுதியளித்தார்.

அந்த வகையில், சூர்யா தனது ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்துள்ளார். இதை தொடர்ந்து, 400-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்ததானம் செய்துள்ளனர். பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், ரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, மேலும் பலரை இந்த நல்ல செயலைச் செய்யவும் தூண்டுகிறது.

இதற்கிடையில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் மிருணால் தாக்கூர், யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள 'கங்குவா' அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'கங்குவா' முதல் பாடலை சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story