விராட் கோலியுடன் என்னுடைய இலக்கு இதுதான் - நியூசிலாந்து வீராங்கனை


விராட் கோலியுடன் என்னுடைய இலக்கு இதுதான் - நியூசிலாந்து வீராங்கனை
x
தினத்தந்தி 20 Aug 2024 8:26 PM GMT (Updated: 20 Aug 2024 11:10 PM GMT)

தாமும் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகை என்று நியூசிலாந்தை சேர்ந்த சாரா ஜெட்லி கூறியுள்ளார்.

வெலிங்டன்,

இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அந்த வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி பிட்னஸ் எனும் வார்த்தைக்கு அடையாளமாகவும் திகழ்கிறார். அதனால் அவர் ஏராளமான இளம் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

அந்த வரிசையில் தாமும் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகை என்று நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீராங்கனை சாரா ஜெட்லி கூறியுள்ளார். மேலும் விராட் கோலிக்கு எதிராக பந்து வீச விரும்புவதாக சாரா கூறியுள்ளார். அத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதே தம்முடைய இலக்கு என்றும் சாரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இது எனக்கு மிகவும் அடிப்படையான விஷயம். மகளிர் கிரிக்கெட்டில் பந்து வீசுவது மிகவும் கடினமானது. ஆனால் ஆடவர் கிரிக்கெட்டில் நான் விராட் கோலிக்கு எதிராக பந்து வீச விரும்புகிறேன். அப்படியே விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். அதுவே என்னுடைய இலக்கு" என்று கூறினார்.


Next Story