பாகிஸ்தானுக்கு பாதகமாக வந்த மழை... 'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறி அமெரிக்கா அசத்தல்


தினத்தந்தி 14 Jun 2024 6:21 PM GMT (Updated: 14 Jun 2024 11:37 PM GMT)

மழையால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று கனவு, தகர்ந்தது.

புளோரிடா,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தது. மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். மாறாக அமெரிக்கா தோற்றால் பாகிஸ்தானுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு நீடித்திருக்கும்.

இத்தகைய சூழலில் இந்த போட்டியை பாகிஸ்தான் அணியும் உற்று நோக்கிக்கொண்டு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக மழை குறுக்கிட்டது. மழை நின்று ஆட்டம் எப்படியும் தொடங்கிவிடும் என மைதானத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். மழை நின்றாலும், மைதானத்தை தயார்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அத்துடன், சிறிது நேரத்தில் மீண்டும் மழை தொடர்ந்தது.

இதன் காரணமாக ஆட்டம் ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் அமெரிக்க அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. மழையால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று கனவு, தகர்ந்தது.


Next Story