தொடரைக் கைப்பற்றி இருந்தாலும், இன்னும் எங்களுடைய வேலை முடியவில்லை - சுப்மன் கில் பேட்டி


தொடரைக் கைப்பற்றி இருந்தாலும், இன்னும் எங்களுடைய வேலை முடியவில்லை - சுப்மன் கில் பேட்டி
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 14 July 2024 5:42 AM GMT (Updated: 14 July 2024 5:44 AM GMT)

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 152 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் முதல் போட்டியில் சேஸ் செய்து தோல்வி அடைந்திருந்தோம். எனவே சேஸ் செய்வது குறித்து நாங்கள் நிறைய பேசினோம். ஆனால் இது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. தற்பொழுது தொடரைக் கைப்பற்றி இருந்தாலும், இன்னும் எங்களுடைய வேலை முடியவில்லை.

நாங்கள் எங்கள் அணியை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறோம். மேலும் அடுத்த போட்டியில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து பயிற்சியாளர் உடன் பேசவில்லை. ஒருவேளை மாற்றம் இருந்தால் அடுத்த போட்டியின் போது டாஸில் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story