8 ஆண்டுகளுக்கு முன்பே என் வாழ்வின் முக்கியமான கேட்சை பிடித்துவிட்டேன் - சூர்யகுமார் யாதவ் பதிவு வைரல்


8 ஆண்டுகளுக்கு முன்பே என் வாழ்வின் முக்கியமான கேட்சை பிடித்துவிட்டேன் - சூர்யகுமார் யாதவ் பதிவு வைரல்
x

image courtesy: PTI 

தினத்தந்தி 9 July 2024 4:15 PM GMT (Updated: 9 July 2024 4:20 PM GMT)

டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று வரலாறு படைத்தது.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றியது. இதில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.

ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் (5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்) விக்கெட்டை பாண்ட்யா கழற்றியது, 18-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே வழங்கி மிரட்டியது, இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (21 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாகவமாக சூர்யகுமார் பிடித்தது இப்படி திக்...திக்...திக் திருப்பங்களுடன் ஆட்டமும் இந்தியா பக்கம் சாய்ந்தது. 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் அடங்கி கோப்பையை கோட்டை விட்டது. சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் சூரியகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் டி20 உலக கோப்பையில், தான் பிடித்தது தனது வாழ்க்கையின் முக்கியமான கேட்ச் அல்ல என்று தனது சமூக வலைதள பக்கத்தில் சூரியகுமார் யாதவ் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் சூர்யகுமார் மற்றும் அவருடைய மனைவி தேவிஷா ஷெட்டி ஆகியோரது திருமண நாள் புகைப்படத்தை பதிவு செய்து, அதில், "டி20 உலகக்கோப்பையில் நான் பிடித்த அந்த கேட்ச் நேற்றுடன் எட்டு நாட்களை நிறைவு செய்தது. ஆனால் என்னுடைய வாழ்நாளின் முக்கியமான கேட்சை நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பிடித்து விட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Next Story