தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்


தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 26 March 2024 10:40 AM GMT (Updated: 26 March 2024 11:17 AM GMT)

கனிமொழியை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் கனிமொழி, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

இதையடுத்து இன்று காலை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், பல்வேறு பகுதிகளில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். அந்த வகையில், தூத்துக்குடி லையன்ஸ் ஸ்டோன் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்-போது லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி, அவரது வீட்டில் தேநீர் அருந்தினார்.

அதன்பின்னர் காமராஜர் காய்கனி மார்க்கெட் பகுதியில் பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது முதல்-அமைச்சருடன் ஏராளமானோர் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். காய்கனி மார்க்கெட்டில் உள்ளவர்களிடம் நிறை குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் மார்க்கெட்டில் உள்ளவர்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


Next Story