'தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை' - விஜய்


தினத்தந்தி 28 Jun 2024 4:50 AM GMT (Updated: 28 Jun 2024 5:49 AM GMT)

தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார்.

முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா தொடங்கியுள்ளது. இவ்விழா நடைபெறும் அரங்கிற்கு வெள்ளை நிற ஆடையணிந்தபடி விஜய் வந்துள்ளார். அங்கு வந்த விஜய் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை அருகில் அமர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து மேடைக்கும் வந்த விஜய், ''தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. துறையை தேர்ந்தெடுப்பதுபோல அரசியலையும் தேர்ந்தெடுக்க வேண்டும்' என பேசினார்.

கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கி வருகிறார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

உதவி ஆணையர் தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 6 மணி வரை இவ்விழா நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்துகொள்பவர்களுக்கு மதியம் அறுசுவை சைவ விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது.


Next Story