தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 July 2024 9:29 PM GMT (Updated: 1 Aug 2024 8:19 AM GMT)

போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசாக தி.மு.க. உள்ளதன் காரணமாக தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இன்றைய இளைஞர்கள் நாளை இக்குடியரசின் மன்னர்கள் ஆவர். இந்த நிலைக்கு அவர்களை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. ஒழுக்கம் ஒருவனுக்கு மிகப் பெரிய சிறப்பைத் தருவதால் ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, சிறு வயது முதலே பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகளை நடத்தி ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். இதன்மூலம் இளைஞர்களின் எண்ணங்கள் சொல்லாலும், செயலாலும் தூய்மையானதாக இருக்கும். ஆனால், இன்று தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் நடமாடும் இடங்கள், வனப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போதைப் பொருள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.

இந்த நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மையமாக வைத்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது குறித்த தகவல் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்ததன் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து 5,970 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் மற்றும் ஏழு இலட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவரை விசாரித்ததில் சென்னை அருகே உள்ள நெற்குன்றத்தில் ஒரு கிடங்கு ஒன்றில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அவர் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு சென்று மேலும் இரண்டு பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 954 கிராம் மெத்தாம் பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவற்றை சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது. போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசாக தி.மு.க. உள்ளதன் காரணமாக தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது.

கஞ்சா விற்பனை, போதைப் பொருட்கள் நடமாட்டம், கொலை, கொள்ளை போன்றவற்றில்தான் தி.மு.க. அரசு முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதன்மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போதைப் பொருட்கள் கடத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாகியுள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், மருத்துவத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முதன்மை மாநிலமாக விளங்கியிருந்த தமிழ்நாடு இன்று போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உளவுத் துறை என்று உண்டு. அந்தத் துறை, கொலை, கொள்ளைக் குற்றங்களில் ஈடுபடுவோர், சமூக விரோதிகள், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் போன்றவர்களை கண்டறிந்து, அந்தத் தகவல்களை அரசுக்கும், காவல் துறைக்கும் அளிக்கும். கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், உளவுத் துறை சுதந்திரமாக செயல்படாததன் காரணமாக, கொலைகள், கொள்ளைகள், போதைப் பொருள் நடமாட்டம், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்றவை அதிகரித்து உள்ளன.

இதனை சரியாக புரிந்து கொள்ளாமல், முன்விரோத கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று சட்ட அமைச்சர் கூறியிருப்பது அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது. இது தி.மு.க. அரசின் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதுபோன்று ஓர் அமைச்சர் தெரிவிப்பது சட்டம் ஒழுங்கை மேலும் சீர்குலைக்க வழிவகுக்கும்.

சட்டம்-ஒழுங்கு என்பது காவல் துறையை வைத்திருக்கும் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு தொடர்புடைய பிரச்சனையில் சட்ட அமைச்சர் பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது. எனவே, முதல்-அமைச்சர் சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அதனை முற்றிலும் ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story