தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்


தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
x
தினத்தந்தி 5 Aug 2024 1:49 AM GMT (Updated: 5 Aug 2024 1:50 AM GMT)

மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை, மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார்.

சென்னை,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதும், அவர்களின் பொருட்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய நிலையில், சமீபத்தில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படையினர் கப்பல் மோதியதில் மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும், 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நாகை, புதுக்கோட்டை உள்பட தமிழக மீனவ சங்க பிரதிநிதிகளுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து மனு வழங்க அண்ணாமலை இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் அளிக்க இருப்பதாக தெரிகிறது.


Next Story