'வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல' - விஜய்


தினத்தந்தி 28 Jun 2024 6:00 AM GMT (Updated: 28 Jun 2024 7:05 AM GMT)

திருவான்மியூரில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் விஜய் பேசினார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக விஜய் பரிசுகளை வழங்குகிறார்.

முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் பேசியதாவது,

'எதிர்கால சந்ததிகளான மாணவ, மாணவியரை சந்திப்பதில் மகிழ்ச்சி. சாதனை படைத்த மாணவர்களை பார்க்கும் போது புதிய உத்வேகம் கிடைக்கிறது. அது இன்று காலை முதல் எனக்குள் வேலை செய்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோரும் அடுத்த ஒரு கட்டம், உங்கள் கேரியரை தேர்வு செய்யும் நிலைக்கு செல்கிறீர்கள். உங்களில் சிலருக்கு அடுத்த நிலை பற்றிய தெளிவான முடிவு இருக்கும். சிலருக்கு குழப்பம் இருக்கும். எல்லா துறைகளும் நல்ல துறைகள்தான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதில் நீங்கள் 100 சதவிகிதம் உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசுங்கள்.

தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் மட்டும் நல்ல படிப்புகள் என்று சொல்லிவிட முடியாது. உலக அளவில் துறை சார்ந்த சிறந்தவர்கள் இருக்கிறார். தற்போது நமக்கு நல்ல தலைவர்கள்தான் தேவை. நான் அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை. படிப்பு துறைகள் ரீதியாகவும் சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் துறை ரீதியான தேர்வாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.



நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா?. நன்கு படித்தவர்கள் தலைவராக வர வேண்டுமா? வேண்டாமா?. இப்போதைக்கு படியுங்கள், மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல. படிக்கும்போது நீங்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம். ஒரு செய்தியை தகவல் வேறு, கருத்து வேறு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது தந்தை என்ற முறையில் எனக்கு அச்சமாக உள்ளது. உங்கள் நண்பர்கள் யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் திருத்தப்பாருங்கள். நீங்கள் ஒருபோதும் தவறான பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். நம்மை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், 'இவ்வாறு கூறினார்.


Next Story