சட்ட சபையில் விஷ சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை: எடப்பாடி பழனிசாமி


சட்ட சபையில் விஷ சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 21 Jun 2024 5:22 AM GMT (Updated: 21 Jun 2024 7:23 AM GMT)

நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம் ஆனால் இது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி விஷசாராய மரண விவகாரத்தில் தமிழக அரசை கண்டிக்கும் விதமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து தமிழக சட்டப்பேரவைக்கு வந்தனர். அவை தொடங்கியதும் அதிமுக , பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம் ஆனால் இது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது;

சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குரல் எழுப்பாதது கண்டிக்கத்தக்கது. மருத்துவர்கள், மருந்துகள் போதிய அளவில் இருப்பதாக அரசு கூறுவது பச்சை பொய். கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். முதல் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.


Next Story