விஷ சாராய விவகாரம்: சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்


விஷ சாராய விவகாரம்: சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 21 Jun 2024 6:01 AM GMT (Updated: 21 Jun 2024 6:15 AM GMT)

விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது.அப்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன்படி அ.தி.மு.க. எம்எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றினர்.இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இந்த நிலையில் சட்டசபையில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது,

விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதிமுகவினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றம் செய்து பேரவை விதிகளுக்கும், மரபுகளுக்கும் மாறாக குழப்பம் ஏற்படுத்தியதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு, இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விதித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சித்தலைவரும் கலந்து கொள்ள வேண்டும்.என தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று அதிமுகவினரை அவைக்குள் வர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.


Next Story