குமரி: பஸ்சுக்காக காத்திருந்த கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர்


குமரி: பஸ்சுக்காக காத்திருந்த கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர்
x
தினத்தந்தி 17 Jun 2024 10:36 PM GMT (Updated: 18 Jun 2024 5:50 AM GMT)

மாணவியின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஒன்றுதிரண்டதால், வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால், மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தோழியை பார்த்துவிட்டு, பஸ்சுக்காக கோட்டார் கம்பளம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது 28 வயதுடைய வாலிபர் ஒருவர் மோட்டாா் சைக்களில் வந்து இறங்கினார். அந்த வாலிபர் மாணவியிடம் பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் மாணவியை கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

பின்னர் மாணவியை கீழே தள்ளி தாக்கினார். இதனால் அந்த மாணவி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த சிலர் ஓடி வந்தனர். பின்னர் அந்த வாலிபரை தடுக்க முயன்றனர். ஆனாலும் அந்த வாலிபர் மாணவியை தொடர்ந்து தாக்கினார். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமானதால் சுதாரித்து கொண்ட வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதையடுத்து காயமடைந்த கல்லூரி மாணவி அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாணவிக்கு முதலுதவி முடிந்து உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இச்சம்பவத்தால் கம்பளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story