முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 19 July 2024 9:27 PM GMT (Updated: 19 July 2024 9:27 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

சென்னை,

அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்ற அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, அந்த நோட்டீசை ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு சட்டசபை செயலாளர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் தீர்ப்பு அளிக்க உள்ளனர். இந்த விவரம் ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள வழக்கு விவரப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


Next Story