திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடு: மு.க.ஸ்டாலின்


திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடு: மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Sep 2024 3:26 AM GMT (Updated: 13 Sep 2024 3:35 AM GMT)

திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கம் என்றென்றும் தமிழையும் தமிழர்களையும் காக்கின்ற இயக்கமல்லவா. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

செப்டம்பர் 15 - இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கித் தந்து, இந்த மாநிலத்தின் உரிமைகளைக் காத்து, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17 - கொள்கைப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள்.

இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். தன்னால் கழகத்திற்கு என்ன லாபம் என்று நினைத்துச் செயலாற்றுபவர்களை இரத்தநாளம் என்று தெளிவான விளக்கம் தந்த தலைவர் கலைஞர்., தி.மு.க.வின் இரத்தநாளங்களாக இருந்து, தங்கள் வாழ்நாளை இயக்கப் பணிக்கு அர்ப்பணித்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார்; தொடர்ந்து வழங்கினார்.

வருகிற 17-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள்தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

தொண்டர்களின் ஆழ்மனக் கருத்துகள் அடிவயிற்றிலிருந்து வெளிப்பட்ட குரலாக ஒலித்ததையும், கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான் கவனிக்கத் தவறவில்லை. தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை தவறுவதில்லை என்ற உறுதியை உங்களில் ஒருவனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

75 ஆண்டுகள் கழித்து, தென்சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்ற தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது

அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு, அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக, அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை.

இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, செப்டம்பர் 17 அன்று வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம். இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டுமல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story