ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரணமான சாதனை அல்ல- மு.க.ஸ்டாலின் பெருமிதம்


தினத்தந்தி 17 Sep 2024 12:06 PM GMT (Updated: 17 Sep 2024 6:54 PM GMT)

தி.மு.க. 'முப்பெரும் விழா' சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.


Live Updates

  • 17 Sep 2024 2:01 PM GMT

    தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள் திமுக முப்பெரும் விழாவில் மு.க ஸ்டாலின் பேசினார். முதல்வர் முக ஸ்டாலின் மேலும் பேசியதாவது:- திமுக பவள விழா எனது தலைமையில் கொண்டாடுவது எனக்கு கிடைத்த பெருமையாகும். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை. தொண்டர்கள் இல்லாம, நான் இல்லை. தொண்டர்களின் உழைப்பு, வியர்வையால்தான் திமுக இன்று உயர்ந்து நிற்கிறது. பவள விழா, முப்பெரும் விழா எழுச்சிமிகு மாநாடு போல் நடைபெற்று வருகிறது. அமெரிக்க பயணத்திற்கு சென்றோம் என்பதை விட வென்றோம் என்று சொல்வதை சரியாக இருக்கும்- முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

  • 17 Sep 2024 1:17 PM GMT

    விருது வழங்கிய மு.க. ஸ்டாலின்

    தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி 'பேரறிஞர்'அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் தி.மு.க.'முப்பெரும் விழா' சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தற்போது தொடங்கி உள்ளது. தி.மு.க. முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, கடந்த 1985ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு  வருகிறது.. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கவுரவமாக பார்க்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர். இதன்படி பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.   . 

  • 17 Sep 2024 1:06 PM GMT

    தி.மு.க. பவள விழா: ஏ.ஐ. மூலம் உரையாற்றிய கலைஞர் கருணாநிதி

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

    திமுக முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு நாற்காலியில் ஏ.ஐ. மூலம் கலைஞர் கருணாநிதி அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்,“பெரியார் வடித்த கொள்கையை, அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட திடமான இயக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக ஆட்சியில் அமர வைத்திருக்கும் மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் மனம் பெருமை கொள்கிறது

    ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு, உழைப்பு... 55 ஆண்டுகளாக கட்சிக்காக அயராது உழைத்து, திராவிட செம்மலாய் இந்தியாவில் சிறப்பான முதல்-அமைச்சராக சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, பாதையில் ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் ஸ்டாலின். வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ் ஓங்குக திராவிட மாடல்” என்று அவர் கூறினார்.

    இந்த விசேஷ ஏற்பாட்டால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். 


Next Story