சென்னையில் செமிகண்டக்டர் ஆலை அமைய ஒப்பந்தம்


சென்னையில் செமிகண்டக்டர் ஆலை அமைய ஒப்பந்தம்
x
தினத்தந்தி 30 Aug 2024 2:03 AM GMT (Updated: 30 Aug 2024 7:07 AM GMT)

செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது அமெரிக்காவை சேர்ந்த அப்ளைடு மெட்டீரியல்ஸ். நிறுவனம்.

சென்னை,

புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில், சான் பிரான்சிஸ்கோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதில், செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனம் செமி கண்டக்டர் ஆலையை சென்னையில் அமைக்கிறது. ரூ.250 கோடியில் 1,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செமிகண்டக்டர் ஆய்வு மையம் அமைகிறது.

ஏ.ஐ. தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் என தகவல் வெளியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன வளர்ச்சி மையமாக இந்த மையம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளது. அதில், சென்னையில் செம்மஞ்சேரியில் மைக்ரோசிப் நிறுவனம் சார்பில் ஆலை அமைக்க தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னையில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பே பால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். பே பால் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுக்கான மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மதுரை எல்காட் வடபஞ்சியில் இன்பினிக்ஸ் நிறுவனம் சார்பில் தொழில்நுட்ப மையம் அமைய ஒப்பந்தம். ரூ.50 கோடியில் 700 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இன்பினிக்ஸ் நிறுவனம் அமைகிறது.

செங்கல்பட்டில் ரூ.400 கோடியில் ஓமியம் நிறுவனம் சார்பில் உதிரிபாக ஆலை அமைய ஒப்பந்தம். எலக்ட்ரோலைசர் உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் கரைசல் அமைப்பின் உதிரிபாகங்களை தயாரிக்க ஆலை அமைகிறது.

தமிழகத்தில் ரூ.450 கோடியில் நோக்கியா ஆய்வு மையம் மற்றும் வளர்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம். நோக்கியா சார்பில் நெட்வொர்க் சோதனை மையம் அமைக்க ஒப்பந்தம்.

சிப்காட், சிறுசேரி, செங்கல்பட்டு பகுதிகளில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க ஒப்பந்தம். கோவை சூலூரில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க யீல்ட் என்ஜினியரிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம். பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள், முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதால் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.


Next Story