வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுக முனைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்


வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுக முனைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2024 5:21 AM GMT (Updated: 26 Jun 2024 6:40 AM GMT)

வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர், குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனாலும், மக்கள் பிரச்சினையைப் பற்றி இப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாக தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.

பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story