சென்னை போக்குவரத்து கழகத்திற்கு 100 புதிய பேருந்துகள் - இன்று முதல் இயக்கம்


சென்னை போக்குவரத்து கழகத்திற்கு 100 புதிய பேருந்துகள் - இன்று முதல் இயக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2024 2:28 PM GMT (Updated: 4 Aug 2024 2:42 PM GMT)

100 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், 66.15 கோடி ரூபாய் மதிப்பிலான 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, இன்று (04.08.2024) சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 66.15 கோடி ரூபாய் மதிப்பிலான 58 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண BS-VI பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 58 தாழ்தள பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.

• மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதில் ஏறி இறங்க வசதியாக பேருந்தின் தளம் 400 மி.மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

• தாழ்தளத்தின் உயரத்தை இடதுபுறத்தில் 60 மி.மிட்டர் அளவில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்கும்படி வசதி செய்யப்பட்டுள்ளது.

• மாற்றுத்திறனாளிகள் வீல்சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சாய்தளம் வசதியும், வீல்சேருடன் அமர்ந்து பயணம் செய்ய தனி இடவசதியும் உள்ளது.

• தானியங்கி கதவுகள் மூடினால் மட்டுமே பேருந்தை நகர்த்த முடியும்.

• பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், ஒலிபெருக்கி மற்றும் காட்சி மூலம் தெரிவிக்கும் LED DISPLAY BOARD பொருத்தப்பட்டுள்ளது.

• மேம்படுத்தப்பட்ட அகலமான குஷன் இருக்கைகள் மற்றும் இடவசதி அதிகரிப்பதற்காக பேருந்தின் நீளம் 12 மீட்டர் மற்றும் காற்றோட்ட வசதி அதிகரிக்க அகலமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

• ஓட்டுநர் பேருந்தை பின்நோக்கி பாதுகாப்பாக இயக்க "Rear view camera", பேருந்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், புதிய வடிவிலான Dash board அமைக்கப்பட்டுள்ளது.

• பேருந்தின் முன்புறம் ஓட்டுநர் பார்வை மறைக்கும் இடத்தை கவனிக்க "Blind Spot Mirror" பொருத்தப்பட்டுள்ளது.

• என்ஜினில் கூடுதல் வெப்பம் காரணமாக தீப்பற்றக் கூடிய சூழ்நிலை வந்தால், அணைப்பதற்கு Sensor உடன்கூடிய Fire Safety Nozzle Engine மேல்பகுதியில் உள்ளது.

மேலும், விடியல் பயணத் திட்டத்தின் வாயிலாக பணிபுரியும் சுய தொழில் புரியும் மகளீர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர்கள் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 102 கோடிக்கு மேல் பயண நடைகள் மேற்கொண்டுள்ளது, அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story