திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருநள்ளாறு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பிரம்மோற்சவ விழா

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் இருந்து யதாஸ்தானம் எழுந்தருளுதல் மற்றும் பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, உற்சவர்கள் தேரில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனை காட்டப்பட்டு காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

அமைச்சர் சாய் சரவணன் குமார், திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ., சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

அணிவகுத்த 5 தேர்கள்

இதையடுத்து சொர்ண கணபதி தேர் முன்செல்ல, 2-வது சுப்பிரமணியர், 3-வது பெரிய தேரில் செண்பக தியாகராஜர், 4-வது நீலோத்பலாம்பாள், 5-வது சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதிகளில் அணிவகுத்து சென்றன. காரைக்கால், திருநள்ளாறு மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், 'தியாகேசா, தியாகேசா' என விண்ணதிர பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை இழுத்துச் சென்றனர்.

கோவில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர்கள் மாலையில் மீண்டும் தேரடிக்கு வந்து சேர்ந்தன. பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை யொட்டி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

போலீஸ் பாதுகாப்பு

விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பிரம்மோற்சவ விழாவில் நாளை (புதன்கிழமை) சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தெப்ப உற்சவமும் நடக்கிறது.


Next Story