சிறுவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது


சிறுவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2023 4:56 PM GMT (Updated: 20 Jun 2023 4:57 PM GMT)

புதுச்சேரியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாகியிலும் 2 பேர் சிக்கினர்.

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் அருகே உள்ள நெற்களம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்றதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், தமிழக பகுதியான சொர்ணாவூரை சேர்ந்த சகாயம் என்கிற அரவிந்த் ராஜ் (வயது 22) என்பதும், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சொர்ணாவூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் மாகியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முகமது சபுவன் (20), கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த விஷால் (30) ஆகியோரை மாகி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 கிராம் கஞ்சா, எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் 300 மி. கிராமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story