புதுவையில்2 நாளில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி


புதுவையில்2 நாளில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி
x

புதுவையில் 2 நாட்களில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவையில் 2 நாட்களில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிட் காயின்

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 34). நேரு வீதியில் கடை வைத்துள்ளார். இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. எதிர்முனையில் சாட்டிங் செய்த நபர் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றுள்ளார்.

அதன் விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. பிட்காயின் வாங்குவதற்கு தற்போது சரியான தருணம், அதில் முதலீடு செய்தால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

மோசடி

இதனை நம்பிய ஹரிகிருஷ்ணன், செல்போனில் வந்த வங்கி கணக்கிற்கு ஒரே தவணையில் ரூ.21 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு பிட்காயின் எதுவும் வரவில்லை. இதையடுத்து, தனக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஹரிகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொழிலதிபர்

தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராமதாஸ் (வயது 42) என்பவர் பிட்காயின் வாங்குவதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார். இதேபோல் கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story