மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்த வாலிபர் பலி


மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்த வாலிபர் பலி
x

கரிக்கலாம்பாக்கம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை வாய்க்காலில் வீசிச்சென்ற நண்பர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியனூர்

கரிக்கலாம்பாக்கம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை வாய்க்காலில் வீசிச்சென்ற நண்பர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் பிணம்

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கத்தில் சாராயக்கடை அருகில் உள்ள வாய்க்கால் பகுதியில் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை பார்வையிட்டனர். டவுசர் மட்டும் அணிந்திருந்த வாலிபரின் தலைமுடி ஈரமாக இருந்தது. மேலும் தலையின் பின்பகுதியில் லேசான காயம் காணப்பட்டது.

ஓட்டல் தொழிலாளி

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை போலீசார் அனுப்பி வைத்தனர். தலையில் காயம் இருந்ததன் அடிப்படையில் அவர் மர்மநபரால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

இறந்தவர், பாகூர் அருகே உள்ள கடலூர் மாவட்டம் கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அசோக் (வயது 25) என்பதும், புதுச்சேரியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்ததும் தெரியவந்தது.

மின்சாரம் தாக்கி பலி

இதையடுத்து அவரது நண்பர்கள் சிலரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கினர். அப்போது அசோக் இறந்ததற்கான காரணம் தெரியவந்தது. அதாவது, நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவருடன் அசோக் கரிக்கலாம்பாக்கம் அருகே தமிழக பகுதியான உடலப்பட்டு ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர், அசோக்கின் உடலை சாராயக்கடை பின்புறம் உள்ள வாய்க்காலில் போட்டுவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் நடந்தது தமிழக பகுதி என்பதால் ரெட்டிச்சாவடி போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த அசோக்கிற்கு அகிலா என்ற மனைவியும், சசிதரன் என்ற மகனும் உள்ளனர். மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story