முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி


முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி
x

File image

தினத்தந்தி 9 Aug 2024 12:08 PM GMT (Updated: 9 Aug 2024 12:14 PM GMT)

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவு ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. தேர்வு நடந்ததில் இருந்து தேர்வு முடிவு வெளியானது வரை வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஒரு வழியாக இளநிலை நீட் தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.இளநிலை நீட் தேர்வு விவகாரம் அப்போது விஸ்வரூபம் எடுத்திருந்ததால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தையநாள் இரவு அந்த தேர்வை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒத்திவைத்தது.அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர்.

நாடு முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவிருக்கும் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் பலருக்கு தொலைதூர நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, கடைசி நேரத்தில் எப்படி தேர்வை தள்ளிவைக்க முடியும்?. கடைசி நேரத்தில் தேர்வை தள்ளிவைக்கக் கோரி கோர்ட்டை நாடுவது தற்போது வழக்கமாகி வருகிறது. தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம் ஆகும். ஒருசில மாணவர்கள் கோர்ட்டை நாடியதால் 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.


Next Story