நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது - சித்தராமையா


தினத்தந்தி 24 Sep 2024 9:39 AM GMT (Updated: 24 Sep 2024 10:53 AM GMT)

கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

மூடா 'முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் முதல்-மந்திரி சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டிற்கு துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் மற்றும் மந்திரிகள் வந்துள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறுகையில், முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை என்றார்.

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக முதல்-மந்திரி சித்தராமையா சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நான் விசாரணைக்கு தயங்கமாட்டேன். சட்டப்படி இதுபோன்ற விசாரணை அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அடுத்த சில நாட்களில் உண்மை வெளிவரும், 17ஏ-வின் கீழ் விசாரணை ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன். இந்த அரசியல் போராட்டத்தில் மாநில மக்கள் எனக்கு ஆதரவாக நிற்கின்றனர்.அவர்களின் ஆசீர்வாதமே எனது பாதுகாப்பு. நான் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தப் போராட்டத்தில் உண்மையே வெற்றி பெறும். பாஜக மற்றும் ஜேடி(எஸ்) -ன் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிரான எங்களது நீதி போராட்டம் தொடரும். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் ஏழைகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதிக்காகவும் போராடி வருவதால், பாஜக மற்றும் ஜேடி(எஸ்) என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story