சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்


சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2024 3:24 PM GMT (Updated: 19 Jun 2024 7:18 AM GMT)

சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்த காங்கிரஸ் தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நடப்பாண்டில் ஜார்க்கண்ட், மராட்டிய மாநிலம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில், சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அக் கட்சியின் தேசிய தலைமை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் மக்களின் ஆதரவை பயன்படுத்தி, வரவிருக்கும் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்யும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். எங்கள் முயற்சிகளின் தொடக்கமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார்கள். இதன்படி ஜார்கண்ட் - ஜூன் 24, மராட்டிய மாநிலம் - ஜூன் 25, அரியானா - ஜூன் 26, ஜம்மு காஷ்மீர் - ஜூன் 27 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story