2025 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவீர்களா? ரசிகரின் கேள்விக்கு தோனி பதில்

ரசிகர் ஒருவர் எம்.எஸ். தோனியிடம் அடுத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

Update: 2024-08-01 12:27 GMT

புதுடெல்லி,

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது.

ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.

அத்துடன் கடந்த சில வருடங்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அதனால் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெற்றதாகவே பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும் அடுத்த சீசனில் தோனி விளையாடி சென்னை மண்ணில் ஓய்வு பெறுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் எம்.எஸ். தோனியிடம் அடுத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு:- "தக்க வைக்கப்படும் வீரர்களுக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அந்த விதிமுறைகள் தெரிந்த பின் நாங்கள் முடிவெடுப்போம். ஏனெனில் தற்போது முடிவு எங்களுடைய கையில் இல்லை. எனவே விதிமுறைகள் இறுதிச் செய்யப்படும்போது நாங்கள் முடிவெடுப்போம். அந்த முடிவை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம்.

ஏனெனில் நாளின் இறுதியில் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாகும். அதனால் விதிமுறைகள், தக்க வைப்புகளின் அடிப்படையில் சிஎஸ்கே அணிக்கு எது சிறந்தது என்பதை பார்த்து அதற்கு தகுந்த நல்ல முடிவை எடுப்போம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்