ஐ.பி.எல்.: அந்த விதி தேவையற்றது என்றுதான் நினைத்தேன்..ஆனால்... - தோனி

இம்பேக்ட் வீரர் விதிமுறை மீது கோலி, ரோகித் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.;

Update:2025-03-26 04:03 IST
ஐ.பி.எல்.: அந்த விதி தேவையற்றது என்றுதான் நினைத்தேன்..ஆனால்... - தோனி

image courtesy: PTI

சென்னை,

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் 18-வது ஆண்டாக இந்த போட்டி வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இந்த தொடரில் மேலும் சுவாரசியத்தை கூட்ட கடந்த 2020-ம் ஆண்டு 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை' கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் இடையே ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க முடியும். அந்த வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இறங்குவதன் தாக்கத்தை கடந்த சீசனில் பார்க்க முடிந்தது. கடந்த ஐ.பி.எல். தொடரில் அணிகள் 41 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தன.

இருப்பினும் இம்பேக்ட் வீரர் விதிமுறை மீது ரோகித் சர்மா, விராட் கோலி போன் முன்னணி வீரர்கள் கடந்த வருடம் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக இம்பேக்ட் வீரர் விதிமுறை ஒரு ஆல் ரவுண்டர் உருவாவதைத் தடுப்பதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விதிமுறை குறித்து சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அந்த விதி (இம்பேக்ட் வீரர் விதிமுறை) அமல்படுத்தப்பட்டபோது நானும் தேவையற்றது என்றுதான் நினைத்தேன். ஏனெனில் அந்த நேரத்திலும் ஐ.பி.எல். விறுவிறுப்பாகவே சென்றது. ஒரு வகையில், இது எனக்கு உதவுகிறது. ஆனால் அதே நேரத்தில் நான் இம்பேக்ட் வீரர் கிடையாது. ஏனெனில் நான் விக்கெட் கீப்பர் என்பதால் தொடர்ந்து களத்தில் இருக்க வேண்டும்.

இந்த விதி அதிக ரன் குவிப்பிற்கு வழிவகுத்துள்ளது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் நிலைமைகள் மற்றும் வீரர்களின் சமநிலை காரணமாகவே அதிக ரன் அடிக்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ரன்கள் எடுப்பது கூடுதல் பேட்ஸ்மேன் காரணமாக மட்டுமல்ல. இது மனநிலையைப் பற்றியது. அனைத்து அணிகளும் தற்போது கூடுதல் பேட்ஸ்மேன் இருக்கிறார் என்ற மனநிலையுடன் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள். அது அவர்கள் மீதான நம்பிக்கை மட்டுமே. டி20 கிரிக்கெட் இப்படித்தான் உருமாறியுள்ளது"என்று கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்