ஸ்ரேயாஸ் அதிரடி அரைசதம்.... குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார்.;

Image Courtesy: @IPL
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற குஜராத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர். இதில் ப்ரப்சிம்ரன் சிங் 5 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கினார்.
மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்னிலும், அடுத்து வந்த உமர்சாய் 16 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்ரேயாஸுடன், ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் ஸ்டாய்னிஸ் 20 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷசாங் சிங் களம் இறங்கினார்.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஆட உள்ளது.