மூன்று மடங்கு அதிகமாக உழைப்பேன்: ரஷியாவில் பிரதமர் மோடி உரை
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
மாஸ்கோ,
ரஷியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல்முறையாக புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறேன். மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. 3 மடங்கு வலிமையுடன், 3 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றுவேன் என்ற உறுதியுடன் பதவியேற்றேன். இம்முறை இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு. இந்த முறை ஏழைகளுக்கு மூன்றாவது கட்டமாக 3 கோடி வீடுகள் வழங்கப்படவுள்ளது. 3 கோடி கிராம பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே அரசின் இலக்கு.
உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவின் பகுதிக்கு சந்திரயானை வெற்றி அடைய செய்த நாடு இந்தியா. டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கு நம்பகமான மாதிரியை வழங்கும் நடாக இந்தியா உள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாடாக இந்தியா இன்று உள்ளது. இந்தியா மாற்றத்தை நோக்கி செல்வதாக அனைவரும் கூறுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.