அடுத்த மாதம் 10-ம் தேதி: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி

நான் விவாதங்களை எதிர் நோக்குகிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Update: 2024-08-09 18:40 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஏ.பி.சி செய்தி ஊடகம் கூறும் போது, டிரம்ப்- கமலா ஹாரிஸ் ஒரு விவாதத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, விவாதங்களை நடத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் விவாதங்களை எதிர் நோக்குகிறேன். ஏனென்றால் நமது சாதனை நேராக மக்களை சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.

ஜனநாயக கட்சி சார்பில் முதலில் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். ஆனால் டிரம்புடனான நேரடி விவாதத்தில் ஜோபைடன் திணறினார்.

இதனால் அவருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக புதிதாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் 5 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் 42 சதவீதமும் டிரம்ப் 37 சதவீதமும் ஆதரவை பெற்றுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் இது மாறுபட்டதாக காணப்படுகிறது. அமெரிக்காவில் 16 கோடி பேர் தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் நபரை தேர்வு செய்ய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் ஜனநாயக கட்சியும் இழந்த ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் குடியரசு கட்சியும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் அமெரிக்க தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி வரும் நிலையில் சக்தி மிகுந்த நாட்டின் சக்தி வாய்ந்த வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகியோர் நேருக்கு நேர் விவாதம் நடைபெறும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்