பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு: 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதி கைது
பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.;

கடலூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியும் தோழிகளாக இருந்தனர். இதில் 13 வயது மாணவி பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார். இவர் அருகில் உள்ள இட்லிகடைக்கு பலகாரம் வாங்க சென்ற போது, அந்த கடை உரிமையாளரான செந்தில்குமார் மனைவி லட்சுமி என்ற தனலட்சுமி, அவரது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி தனது லீலை பற்றி வெளியே தெரியாமல் இருக்க அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று, கட்டாயப்படுத்தி ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தார். தொடர்ந்து ஆனந்தராஜ் அந்த மாணவியை மிரட்டி, தனது நண்பர்களான திட்டக்குடியை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கும் விருந்தாக்கினார்.
அதனை தொடர்ந்து தனலட்சுமி 13 வயது மாணவியை மிரட்டி, அவரது தோழியான 14 வயது மாணவியையும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையாக்கினார். அதன்பிறகு அந்த மாணவிகளை தனலட்சுமி விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று விருத்தாசலத்தை சேர்ந்த அன்பு என்ற செல்வராஜ் மூலம் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்.
தொடர்ந்து தனலட்சுமி திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு 2 நாட்கள் மாணவிகளை அனுப்பி வைத்தார். அதில் அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதேபோல் கலாவும், தனலட்சுமியும் சக புரோக்கர்களும் 2 மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், வடலூர், நெய்வேலி ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.
கடைசியாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார் (39), அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். அப்போது மாணவிகள் இருவரும் சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் இருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் சதீஷ்குமார், தமிழரசி, திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி இவ்வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் 17 பேரில் 16 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட ஒரு பெண் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இவ்வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சதீஷ்குமார் கோவையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சென்று, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையில் வீட்டு வேலை செய்து வந்த தமிழரசியை போலீசார் கைது செய்து கடலூர் அழைத்து வந்தனர்.