கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணை நாய் கடிக்க முயற்சித்த சம்பவத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-11 17:59 GMT

மூலக்குளம்

புதுவை ரெட்டியார் பாளையம் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்-ஜெயா தம்பதியின் மகள் பவித்ரா (வயது 24). இவர் புதுச்சேரி இ.சி.ஆர். சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சம்பவத்தன்று இரவு இவர், பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது வீட்டு அருகே வசிக்கும் பிரகாஷ் மகள் பிரியங்கா என்பவரின் நாய் பவித்ராவை கடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பவித்ராவுக்கும், பிரியங்காவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரியங்கா, பவித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தடுக்க முயன்ற அவரது தாயார் ஜெயாவையும் பிரியங்காவின் தாயார் தங்கம், தந்தை பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து தாக்கினர். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் கொடுத்தார். அதன்பேரில், பிரகாஷ், அவரது மனைவி தங்கம் மற்றும் மகள் பிரியங்கா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்