கோவிலுக்கு வந்த பெண்ணிடம் நகை, பணம் திருடியவர் கைது

வீராம்பட்டினத்தில் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-21 16:14 GMT

அரியாங்குப்பம்

வீராம்பட்டினத்தில் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவிலுக்கு வந்தனர்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30). அவரது மனைவி மணிமேகலை (22). இவர்களது மகள் தீபிகாஸ்ரீ (2). இந்த நிலையில் மணிமேகலையும், அவரது தாயார் கலைவாணி மற்றும் குழந்தை தீபிகாஸ்ரீ ஆகியோர் அரியாங்குப்பம் அடுத்துள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட கடந்த 18-ந்தேதி வந்தனர்.

சாமி கும்பிட்டு விட்டு அந்த கோவில் முன்புற மண்டபத்தில் இரவு நேரத்தில் தங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர்கள் வைத்திருந்த கைப்பை, குழந்தையின் 2 கொலுசுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பெண் கைது

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் கைப்பையில் இருந்த மணிமேகலையின் செல்போன் எண்ணையும் ஆய்வு செய்தனர்.

அப்போது கைப்பை, கொலுசை திருடியது அரியாங்குப்பம் சண்முகம் நகர் பகுதியை சேர்ந்த சிவசங்கரி (36) என்பதும், கோவில் அருகே கொய்யாப்பழம் விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பையில் இருந்த ரூ.8 ஆயிரத்து 500, விலையுயர்ந்த செல்போன், குழந்தையின் 2 கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்