வியாபாரி, ஆசிரியர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை

திருக்கனூர் அருகே ஒரே தெருவில் வியாபாரி, ஆசிரியர் வீட்டை உடைத்து 35 பவுன் நகைகள், ரூ.4½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-10-07 16:03 GMT

திருக்கனூர்

திருக்கனூர் அருகே ஒரே தெருவில் வியாபாரி, ஆசிரியர் வீட்டை உடைத்து 35 பவுன் நகைகள், ரூ.4½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

வியாபாரி

திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான கண்டமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் வத்தல், வடகம் தயாரித்து ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 2-ந் தேதி சின்னசாமி குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்கு சென்றார். இவர் இன்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், 1 லட்சம் ரொக்க பணம் மற்றும் எல்.இ.டி. டி.வி., பித்தளை பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இதை கண்டு சின்னசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணம் கொள்ளை

வியாபாரி சின்னசாமி வீடு இருக்கும் தெருவில் வசித்து வருபவர் கோதண்டராமன். இவர் சேஷாங்கனூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக கோதண்டராமன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

இந்த நிலையில் கோதண்டராமன் இன்று வீடு திரும்பியபோது, அவரது வீட்டிலும் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்த கொள்ளையர்கள் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, 3.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் டி.வி., கியாஸ் சிலிண்டர், லேப்-டாப் ஆகியவற்றையும் வாரி சுருட்டிச் சென்றனர்.

நோட்டமிட்டு கைவரிசை

அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

வியாபாரி சின்னசாமி, ஆசிரியர் கோதண்டராமன் ஆகியோர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீடுகளை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார், மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்