அவளுக்கு எப்படி பீட்சா கொடுக்கலாம்..? துப்பாக்கி சூட்டில் முடிந்த குடும்ப சண்டை

டெல்லியில் ஒரு குடும்பத்தினர் பீட்சாவை பகிர்ந்து சாப்பிடும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-10-17 11:12 GMT

புதுடெல்லி:

வடமேற்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் வசித்து வரும் ஜீஷன் என்பவர் நேற்று தனது குடும்பத்தினர் அனைவருக்கும் பீட்சாக்கள் வாங்கி வந்துள்ளார். பீட்சாவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். அவர் தனது தம்பி ஜாவேத்தின் மனைவி சாத்மாவுக்கு கொடுத்தபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஜீஷனின் மனைவி சாதியாவுக்கும், அவரது தம்பி மனைவி சாத்மாவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது. அதனால் அவளுக்கு எப்படி பீட்சா கொடுக்கலாம்? என சாதியா தன் கணவரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மூவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர், நேற்று இரவு சாதியா தனது சகோதரர்கள் முன்தாகிர், தப்சீர், ஷாஜத் மற்றும் குல்ரேஸ் ஆகியோரை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அவர்கள் வந்ததும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சகோதரர்கள் 4 பேரும் சேர்ந்து சாத்மாவிடம் இதுபற்றி பேச, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முந்தாஹிர் துப்பாக்கியால் சாத்மாவை நோக்கி சுட, அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்தது. பலத்த காயமடைந்த சாத்மா, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து சீலம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாதியாவின் சகோதரர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்