தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு கார் உற்பத்தி!

சென்னையில் போர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்படவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டார்.

Update: 2024-10-22 00:49 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் 17 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, உலகப் புகழ்பெற்ற 500 நிறுவனங்கள் இடம்பெற்ற பார்ச்சூன் பட்டியலிலுள்ள 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. சென்னையில் இயங்கிவந்த உலகப் புகழ்பெற்ற கார் கம்பெனியான போர்டு நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. சென்னையை தொடர்ந்து குஜராத்தில் சனாண்ட் என்ற இடத்தில் தொடங்கிய தொழிற்சாலையையும் டாட்டா நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. இதேபோல், சென்னை தொழிற்சாலையையும் விற்க முயற்சிகள் நடந்தன.

ஆனால், சென்னையில் போர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்படவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டார். அமெரிக்கா சென்றிருந்த நேரத்திலும் அந்த நிறுவன அதிகாரிகளை சந்தித்து அழைப்பு விடுத்தார். மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க முன்வந்தால், தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, அமெரிக்காவில் இருந்து விமானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்ட நேரத்தில், போர்டு நிறுவனத்திடம் இருந்து ஒரு நல்ல செய்தி கிடைத்தது. முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் போர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடிவு செய்துவிட்டது என்ற நல்ல செய்திதான் அது.

உலகில் முன்னணி கார் நிறுவனமான போர்டு, அமெரிக்காவிலுள்ள மிச்சிகனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனம் சென்னைக்கு வர மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் எடுத்த முயற்சிகள்தான் காரணம். ஜெயலலிதா ஆட்சியில்தான் இந்த தொழிற்சாலையை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1995-ம் ஆண்டு ரூ.1,700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 350 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைத்த இந்த நிறுவனம் 1996-ல் முதல் காரை வெளியிட்டது. முதலில் மகிந்திரா நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்ட இந்த நிறுவனம், 1998-ல் தனியாக செயல்பட தொடங்கியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலை விரிவாக்கத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.

அவர் அளித்த பல சலுகைகளால் இந்த தொழிற்சாலையில் 3 ஷிப்டுகளில் வேலை நடந்து, பலவித பெயர்களிலான கார்கள், கார் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு உலகிலுள்ள 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மீண்டும் 2009-ல் ரூ.1,500 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதையும் கருணாநிதி தொடங்கிவைத்தார். இதன் மூலம் ஒரு லட்சமாக இருந்த கார்களின் உற்பத்தி 2 லட்சமாக உயர்ந்தது. இதுதவிர, ஆண்டுக்கு 2½ லட்சம் கார் என்ஜின்களையும் தயாரிக்க தொடங்கியது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த நிறுவனம் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் 3 ஆண்டுகளுக்கு பிறகு, மூடப்பட்ட அதே செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலையை திறப்பதாக அறிவித்தது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்த தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இதன்மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த தொழிற்சாலையில் மின்சார வாகனங்கள், அதற்கு தேவையான பேட்டரிகள் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு மேலும் உத்வேகத்துடன் செயல்படும். போர்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதன் மூலம் ஆசியாவின் டெட்ராயிட் என்ற பெயரை மீண்டும் தமிழ்நாடு நிரூபித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்