சபரிமலை புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு

குலுக்கல் மூலம் நடைபெற்ற தேர்வில், பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மா சபரிமலைக்கான புதிய மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார்.

Update: 2024-10-18 05:54 GMT

சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள மாளிகப்புரம் கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர்களின் பணிக்காலம் அடுத்த மாதம் 15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 2024-25-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு சபரிமலை மற்றும்  மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நேற்று சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது.

நேற்று காலை சபரிமலை கோவிலில் உஷபூஜைக்கு பிறகு, புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியது. சபரிமலை மேல்சாந்திக்கான போட்டியில் 25 பேரும், மாளிகப்புரம் மேல்சாந்திக்கான போட்டியில் 15 பேரும் இருந்தனர். அவர்களின் பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதப்பட்டு சன்னிதானத்தில் வைத்து தந்திரி கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் முன்னிலையில் கோவில் பாரம்பரியப்படி குலுக்கல் நடத்தப்பட்டது.

பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மா சபரிமலைக்கான புதிய மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார். மாளிகப்புரம் மேல்சாந்தியை பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த சிறுமி வைஷ்ணவி வர்மா தேர்வு செய்தார்.

அதில், சபரிமலை புதிய மேல்சாந்தியாக கொல்லம் சக்திகுளங்கரையை சேர்ந்த அருண்குமார் நம்பூதிரியும், மாளிகப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய மேல்சாந்திகள் அடுத்த மாதம் 16-ந் தேதி பொறுப்பேற்கிறார்கள். இவர்களது பணிக்காலம் ஒரு வருடம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்