தாயின் ஆதரவு தனிச் சிறப்பானது...பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய செஸ் வீரர்

ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் , பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Update: 2023-08-22 10:19 GMT

சென்னை,

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.

முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நேற்று நடந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார்.

இந்த நிலையில் ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் , பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய்க்கு வாழ்த்துகள்.தாயின் ஆதரவுடன் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். தாயின் ஆதரவு தனி சிறப்பானது. கடினமான நிலைகளில் மிகவும் திடமாக இருந்துள்ளார் பிரக்ஞானந்தா. என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்