புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை நேற்று ருசித்தது.

Update: 2017-08-10 21:30 GMT
நாக்பூர்,

5-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

நாக்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 22-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்சுடன் (பி பிரிவு) பலப்பரீட்சையில் இறங்கியது. இந்த முறை சுதாரிப்புடன் விளையாடிய தமிழ்தலைவாஸ் வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். முதல் பாதியில் 12-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றிருந்த தமிழ் தலைவாஸ் அணி அந்த முன்னிலையை கடைசிவரை தக்க வைக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது.

பிற்பாதியில் பெங்களூரு புல்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி சரிவில் இருந்து மீண்டு வந்தனர். ஒரு நிமிடம் இருக்கும் போது 24-26 என்று கொண்டு வந்தனர். இந்த பரபரப்பான கட்டத்தில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் ரோகித் குமார், தமிழ் தலைவாஸ் எல்லைக்குள் ரைடுக்கு வந்து ஒருவரை தொட்டு விட்டு, திரும்புவதற்குள் மற்றொரு தமிழ் தலைவாஸ் வீரர் அமித் ஹூடா அவரை வெளியில் தள்ளி, அட்டகாசப்படுத்தினார். அது தான் வெற்றிக்குரிய திருப்பமாக அமைந்தது.

முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 29-24 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. தமிழக அணியில் அதிகபட்சமாக பிரபஞ்சன் 6 புள்ளிகளும், பெங்களூரு அணியில் ரோகித் குமார் 11 புள்ளிகளும் சேகரித்தனர்.

3-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது தான் முதல் வெற்றியாகும். ஏற்கனவே பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 31-32 என்ற புள்ளி கணக்கில் தமிழ்தலைவாஸ் அணி தோற்று இருந்தது. அதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்து விட்டது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 30-28 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை சாய்த்தது. இன்றைய ஆட்டத்தில் குஜராத்-மும்பை (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்