இந்திய டெஸ்ட் கேப்டன் பொறுப்புக்கு அஸ்வின் தகுதியான ஒருவர்- பாக். முன்னள் வீரர் கருத்து

இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களில் அஷ்வினும் ஒருவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-27 18:08 GMT

கராச்சி,

அஷ்வினை விஞ்ஞானி என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அஷ்வினை பாராட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களில் அஷ்வினும் ஒருவர் என்று கருதுகிறேன். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் அவர் எடுத்த 42 ரன்களை சதத்துடன் நாம் ஒப்பிட வேண்டும்.

இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் அனில் கும்ப்ளேவைப் போன்றவர் அஷ்வின். இந்திய அணியின் நெருக்கடியான நேரங்களில் மிகவும் கூலாக அஷ்வின் பலமுறை செயல்பட்டார். பந்து வீச்சில் மட்டுமின்றி, சில ஆட்டங்களில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

வங்கதேச அணியின் மோமினுல் ஹக் மிகச்சிறந்த ஆட்டக்காரர். துரதிருஷ்டவசமாக அஷ்வின் கொடுத்த கேட்ச்சை அவர் பிடிக்க தவறி விட்டார். இதற்கான பேரிழப்பை வங்கதேச அணி எதிர்கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்