பிரான்சில் டீன்-ஏஜ் சிறுவன் சுட்டு கொலை; போலீசாருக்கு எதிராக போராடிய 150 பேர் கைது

பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-29 10:45 GMT

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நீல் (வயது 17) என்ற சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான். கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.

இதுபற்றி அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மனின் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், போராட்டம் வன்முறையாக மாறியதில், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன என கூறியுள்ளார்.

வன்முறை சம்பவத்தில் 24 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். 40 கார்கள் தீக்கிரையாகி உள்ளன. இதனால், வன்முறை தொடர்ந்து பரவி விடாமல் தடுப்பதற்காக 2 ஆயிரம் கூடுதல் காவல் அதிகாரிகள் நேற்று குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், மந்திரிகள் மட்டத்திலான நெருக்கடி பிரிவினர் கலந்து கொண்ட கூட்டத்தில் தலைமையேற்று இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்