அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம்

அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

Update: 2024-08-02 05:26 GMT

வாஷிங்டன்,

அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷியா, பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அதேபோல், ரஷியா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நார்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷியா, பெலாரஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதில் குறிப்பாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி வால் ஸ்டிரீட் ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் மற்றும் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய பால் வீலன் போன்றோர் ரஷியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ரஷியாவை சேர்ந்த வடிம் ரசிகொவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ரஷிய உளவுத்துறையின் உத்தரவின்பெயரில் இந்த கொலையை அரங்கேற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அவர் ஜெர்மனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், உளவு பார்த்ததாக ரஷியாவை சேர்ந்த 3 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட நபர்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று இரு தரப்பும் கூறி வருகின்றன. அதேவேளை, சிறையில் உள்ள தங்கள் நாடுகளை சேர்ந்த நபர்களை விடுதலை செய்ய அந்தந்த நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சிகளுக்கு அவ்வப்போது பலன் கிடைத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா - ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், பனிப்போர் காலத்திற்கு பின் முதல் முறையாக அமெரிக்கா - ரஷியா இடையே கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

அதன்படி, ரஷியா, பெலாரஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி உள்பட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக அமெரிக்கா, ஜெர்மனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷியா, பெலாரசை சேர்ந்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 26 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் பரிமாற்றம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றுள்ளது. கைதிகள் பரிமாற்றத்தில் தி வால் ஸ்டிரீட் ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் , அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் பால் வீலன் , ரஷியாவை சேர்ந்த வடிம் ரசிகொவ் உள்ளிட்டோரும் அடக்கம்.

அமெரிக்காவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து பின்னர் ரஷியா திரும்பினர். அவர்களை ரஷிய அதிபர் புதின் விமான நிலையத்தில் வரவேற்றார். அதேபோல், ரஷியாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி சென்றடைந்தனர். விடுதலையான அமெரிக்கர்கள் அதிபர் ஜோ பைடனை சந்தித்தனர்.

ரஷியா, மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான பனிப்போருக்கு பிறகு இருதரப்பும் அதிக எண்ணிக்கையிலான கைதிகளை பரிமாறிக்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்